9 தொகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி மனிதசங்கிலி; கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி

 

தொட்டியம், மார்ச் 29: திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பில் முசிறி சப்-கலெக்டர் சுசிரீ சுவாங்கி குந்தியா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பயிற்சி வகுப்பில், தேர்தலில் பணியாற்ற உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய இப்பயிற்சி மதியம் வரை நீடித்தது.

இதில், வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற வேண்டிய முறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், விவிபேட் கருவியின் செயல் பாடுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. முசிறி சப்-கலெக்டர் சுசிரீ சுவாங்கி குந்தியா, அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது: தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மிகுந்த கவனத்துடனும், நடுநிலையோடும் செயல்பட வேண்டும்.

இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் அதனை விரைவில் சரி செய்யும் முறைகளை தெளிவாக கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, முசிறி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதன், தொட்டியம் தாில்தார் லஜபதிராய் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Related Stories: