மயிலம் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் திருட்டு

மயிலம், மார்ச் 29: மயிலம் அடுத்துள்ள பாதிராபுலியூர் கிராமத்தில் கிரஷர் பெல்ட் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.4 லட்சம் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த முரளிதரன் மகன் ராஜ்குமார் (35) என்பவர் மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் பகுதியில் கிரஷர் பெல்ட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை கடையின் வலது பக்க தடுப்பு ஷீட்டை கழட்டி, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடை உள்கதவின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிசிடிவி காட்சிகள் மூலம் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திடுடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மயிலம் மற்றும் மயிலம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் வீடுகள் மற்றும் கடைகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கீழ்எடையாளம் கிராமத்தில் 9 பவுன் தங்க நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்க பணம் வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்றனர். அதே கிராமத்தில் 20 நாட்களுக்கு முன்பு சலூன் கடை உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை வீட்டின் கதவை உடைத்து திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்கள் மயிலத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தொடர்ச்சியாக அரங்கேறி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: