பானாஜி: கோவாவில் 30 சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கோவா பாஜ கவுன்சிலரின் மகன் கைது செய்யப்பட்டார். கோவா மாநில பாஜ கவுன்சிலர் சுஷாந்த் நாயக். இவரது 22 வயது மகன் சோஹம் நாயக். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக 25 முதல் 30 சிறுமிகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அந்தரங்க காட்சிகளை வீடியோவாக எடுத்து வைத்து தொடர்ந்து பணமும் பறித்து வந்துள்ளார். மேலும் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது இந்த வீடியோக்களை காட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெளியே தெரிய வந்ததும் கோவா முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சோஹம் நாயக் என்பவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரையும் அடையாளம் காணவும், அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும், விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
