புழல், மார்ச் 20: புழல் சிறையில் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த வெளிநாட்டு கைதி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, உள்ளூர் கைதிகள் மட்டுமின்றி பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய வெளிநாட்டு கைதிகளும் உள்ளனர். இங்கு, போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த டோமிங்கோஸ் மெண்டஸ் அஃபோன்சோ (60) என்பவர், கடந்த 2023ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில், சென்னை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மூலம் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த மாதம் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த போர்ச்சுகல் நாட்டு கைதி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கைதிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறை அதிகாரிகள், அளித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
