ரூ.2,929 கோடி வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானியிடம் சிபிஐ 2வது நாளாக விசாரணை

புதுடெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானி மீது பதிவு செய்யப்பட்ட ரூ.2929 கோடி வங்கி மோசடி வழக்கில் சிபிஐ 2வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தியது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(எஸ்பிஐ) வழங்கிய கடன் நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எஸ்பிஐ புகாரின்படி 2018ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி பல்வேறு கடன் வழங்குனர்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை நிலுவையில் வைத்திருந்தது. இதில் பொதுத்துறை வங்கி எஸ்பிஐக்கு மட்டும் ரூ.2929 கோடி இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணைக்காக தொழிலதிபர் அனில் அம்பானி நேற்று முன்தினம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளாக அனில் அம்பானியிடம் விசாரணை நடத்தப்பட்டது.காலையில் 10 மணிக்கு அனில் அம்பானி வந்தார். மாலையில் 5.15 மணி வரை விசாரணை நடந்தது. வங்கியால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் நிதியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு, கையாடல் மற்றும் பிற முறைகேடுகள் குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டதுடன், பல ஆவணங்களும் அவரிடம் காண்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: