புதுடெல்லி: நீதித்துறை ஊழல் குறித்த என்சிஇஆர்டியின் சர்ச்சைக்குரிய பாடத்தை மறு ஆய்வு செய்ய ஒன்றிய அரசால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) புதிதாக வெளியிட்ட 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் நீதித்துறை பற்றிய சர்ச்சைக்குரிய பாடம் இடம்பெற்றிருந்தது. அதில், தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி மற்றும் நீதித்துறையில் ஊழல், நீதிபதிகள் பற்றாக்குறையால் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவை அடங்கும்.
இந்த புத்தகம் குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாஷி மற்றும் நீதிபதி விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த விவகாரத்தை எழுப்பினர். இதில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிமன்றம் அந்தப் புத்தகத்திற்குத் தடை விதித்ததுடன், அதுவரை வெளியிடப்பட்ட அனைத்துப் புத்தகங்களையும் திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது. தனது தவறை ஒப்புக்கொண்டு, அந்தப் பாடம் தற்செயலாக உள்ளே வந்துவிட்டதாக என்சிஇஆர்டி நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது.
இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நேற்று ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, என்சிஇஆர்டியின் சர்ச்சைக்குரிய பாடத்தை ஆய்வு செய்ய மூத்த வழக்கறிஞரும்,முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான கே.கே.வேணுகோபால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ேஹாத்ரா,தேசிய நீதித்துறை அகாடமி இயக்குனர் நீதிபதி அனிருத்தா போஸ் மற்றும் துணை வேந்தர் ஒருவர் இடம் பெற்றுள்ளனர் என்றார்.
