மேற்குவங்க மாநிலத்தில் நடந்த எஸ்ஐஆர் நடைமுறைகளை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள தர்மதலாவில் முதல்வர் மம்தா உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். தேர்தல் கமிஷன் குழுவினர் வந்துள்ள இந்த நேரத்தில் மம்தாவின் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த இடத்தில் பாஜவினர் தங்கள் கைவரிசை காட்டியது தான் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. மார்ச் 14 அன்று பிரதமர் மோடி கொல்கத்தா வர உள்ளார். அவரது பொதுக்கூட்டத்தை விளம்பரப்படுத்தும் வகையில் மம்தா தர்ணா இருக்கும் இடத்தில் புகுந்து பா.ஜவினர் துண்டுபிரசுரங்களை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதை அறிந்ததும் மம்தா கடுப்பாகி விட்டார். இதுபற்றி போலீசில் புகார் அளிக்க அமைச்சர் சஷி பஞ்சாவுக்கு அவர் உத்தரவிட்டார். இதுகுறித்து மம்தா கூறுகையில், ‘வேறு அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளில் இதுபோன்ற துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க அவர்களுக்கு உரிமை இல்லை.
அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைக்க வேண்டும். பாஜ தேர்தல் வன்முறையை செயல்படுத்த நினைக்கிறது. அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை. அவர்கள் வாக்கு மோசடி செய்பவர்கள். அவர்கள் நிறுவனங்களைப் பயன்படுத்துகிறார்கள்’ என்றார்.
