ஆம்புலன்ஸ் தர அரசு மருத்துவமனை மறுப்பு: பச்சிளம் குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் எடுத்துச் சென்ற தந்தை: ஜார்க்கண்டில் அவலம்

 

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டம் பங்கராசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்கிருஷ்ணா ஹேம்ப்ரம். இவரது மனைவி ரீட்டா திரியாவுக்கு கடந்த சனிக்கிழமை, சக்ரதர்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

ஆனால் பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை தனது வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி கேட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் தர மறுத்துவிட்டார்களாம். இதனால், குழந்தையின் உடலை ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து 20 கி.மீ தூரம் உள்ள தனது கிராமத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து ராம்கிருஷ்ணா ஹேம்ப்ரம் கூறுகையில், ”பிரசவத்தின் போதும் அதற்குப் பிறகும் மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை. அதனால்தான் என் குழந்தை இறந்தது. உடலை ஊருக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் அல்லது வேறு ஏதேனும் வாகனம் தருமாறு கேட்டோம், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.

வேறு வழியின்றி, ஒரு பழைய அட்டைப் பெட்டியில் என் குழந்தையின் உடலை வைத்து, அங்கிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள என் வீட்டிற்கு சுமந்து சென்றேன்’’ என்று தெரிவித்தார். ஆனால், உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் என்று எங்களிடம் யாரும் கேட்கவில்லை என்று மருத்துவமனை பொறுப்பு அதிகாரி டாக்டர் அன்சுமான் சர்மா மறுத்துள்ளார்.

Related Stories: