சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் கடந்த 11 ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கிக் கிடந்த வக்பு வாரியத்தை தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக அவசர அவசரமாக அமைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் பாஜ கூட்டணி அரசின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் முஸ்லிம் அல்லாத இருவரை வாரியத்தில் நியமித்துள்ள முதல் மாநிலம் என்ற தேவையற்ற முன்னுதாரணத்தை புதுச்சேரி உருவாக்கியுள்ளது.
வக்பு வாரியத்தில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்களை திட்டமிட்டு நுழைத்திருப்பது முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி, அச்சம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களை இவ்வாறு திணிப்பது சமூக ஒற்றுமையையும் அமைதியையும் பாதிக்கும் செயலாகும். எனவே, சிறுபான்மையினரின் உணர்வுகளையும் ஜனநாயக நெறிகளையும் மதித்து, இந்த சர்ச்சைக்குரிய நியமனங்களை புதுச்சேரி அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் தகுதியும் நம்பகத்தன்மையும் கொண்ட முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை கொண்டு வக்பு வாரியத்தை மறுசீரமைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
