ஜெயங்கொண்டம், பிப்.27: அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை அறிவுரை பணி செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.இந்த நிகழ்ச்சியில் செயலியின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்து மாணவிகள் விளக்கமளித்தனர்.
இந்த செயலியின் மூலம், விவசாயிகள் தினசரி வானிலை முன்னறிவிப்பு, மழை, வெப்பநிலை, காற்றின் நிலை போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், கிராம அளவிலான பயிர் சாகுபடி ஆலோசனைகள், வேளாண் செயல்முறைகள் மற்றும் மண் நிலை குறித்த தகவல்கள் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம் என எடுத்துரைத்தனர்.
இச்செயலியை பயன்படுத்துவதன் மூலம், விவசாயிகள் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து, பயிர் சேதங்களைத் தவிர்க்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் முடியும் எனக்கூறினர். இந்த செயலி விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், வேளாண்மையில் ஆர்வம் கொண்ட பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. திருமானூர் வட்டாரத்தைச் சேர்ந்த ஞானாம்பிகை, தில்ஷா, தனலெட்சுமி, தனுஷியா, தேஜஸ்வினி பவ்மிதா, கௌசல்யா, ஹரிணி, இளவரசி ஆகிய மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தனர்.
