கும்பாபிஷேக விழாவில் பெண்ணிடம் 5 பவுன் ‘அபேஸ்’

கெங்கவல்லி, பிப். 23: ஆத்தூர் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில், கூட்ட நெரிசலில் பெண்ணிடம், 5 பவுன் தாலி செயினை மர்ம நபர் பறித்து சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தாண்டவராயபுரம் சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் தாண்டவராயபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கோயிலுக்கு வந்த பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மனைவி வனராணி (60) கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை மர்மநபர் பறித்துச்சென்றார். அதிர்ச்சியடைந்த வனராணி, இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ சிவசக்தி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருவிழா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் அமைக்கவேண்டும் என ஏற்கனவே காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் கோயில் நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. இதனால் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: