326 நாட்களாக நீண்ட தேடுதல் வேட்டை; பனிமலை உச்சியில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: எல்லையில் ராணுவம் அதிரடி சாதனை

ஜம்மு: காஷ்மீர் மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்த 7 தீவிரவாதிகளை நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மற்றும் செனாப் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த வெளிநாட்டுத் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து, பாதுகாப்பு படையினர் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்தத் தீவிரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஜம்மு பகுதிக்கு ஊடுருவும் வழிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவர்களை அடியோடு ஒழிக்கவும் ராணுவத்தின் வைட் நைட் கார்ப்ஸ் பிரிவு, சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து மலைப்பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சுமார் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் அடி உயரம் கொண்ட பனி சூழ்ந்த மலைகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் கடந்த 11 மாதங்களாக நடந்த பல்வேறு சண்டைகளில் ராணுவத் தரப்பில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் மிகவும் சவாலான சூழலில் கடந்த 326 நாட்களாகத் தொடர்ந்து நடந்த இந்தத் தேடுதல் வேட்டையானது தற்போது வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. டிரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் உதவியுடன் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பின் தளபதியான சைபுல்லா உட்பட 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறும்போது, ‘கடும் குளிர் மற்றும் உறைபனி காலநிலையிலும் தொழில்நுட்ப உதவிகளுடன் ராணுவம் மற்றும் புலனாய்வுத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தேடப்பட்டு வந்த 7 தீவிரவாதிகளும் தற்போது ஒழிக்கப்பட்டுள்ளனர்; சவாலான சூழலில் எங்கள் வீரர்கள் வெளிப்படுத்திய தைரியத்திற்கும், மன உறுதிக்கும் முன்னாள் எதுவும் நிற்க முடியாது என்பது நிரூபணமாகி உள்ளது’ என்று தெரிவித்தனர்.

Related Stories: