டெல்லி: இரட்டை இலை சின்னத்துக்கு தடைகோரிய மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும். இரட்டை இலை சின்னத்துக்கு தடை கோரியும் தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு கொடுத்துள்ளார். இதனை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காத நிலையில், புகழேந்தி தொடர்ந்த நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ஐ.ஆர் பணிகள் காரணமாக அதிமுக கட்சி விவகாரம் குறித்த மனுக்கள் மீது முடிவு எடுக்க இயலவில்லை என்றும் இது போன்ற மேலும் 6 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த புகழேந்தி தரப்பு வழக்கறிஞர், எஸ்.ஐ.ஆர் பணிகள் கடந்த சில மாதங்களாக தான் நடைபெறுகிறது என்றும் தங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகார் கொடுத்தும் தலைமை தேர்தல் ஆணையர் திட்டமிட்டே கால தாமதம் செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார். தற்போது தேர்தலும் நெருங்கிவிட்டது என்றும் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தேர்தல் வருவதற்கு முன்பே ஏன் முடிவு எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் 4 வாரத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. பின்னர் வழக்கு மே 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
