கணவன் இறந்த துக்கத்தால் விபரீதம் மகளை விஷம் கொடுத்து கொன்று தாயும் தற்கொலை: திருச்சி அருகே சோகம்

லால்குடி: திருச்சி மாவட்டம் கல்லக்குடி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(42). இவரது மனைவி சுமதி(35). இவர்களது மகள்கள் அனுசியா (14), சக்தி (8). இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத ரவிச்சந்திரன் கடந்த டிசம்பர் 18ம் தேதி மாரடைப்பால் இறந்து விட்டார். தொடர்ந்து சுமதி 2 மகளுடன் வசித்து வந்தார். குடும்ப கஷ்டத்திலும், கணவன் இறந்த துக்கம் காரணமாகவும் சுமதி சோகத்தில் இருந்து வந்தார். இதனால் மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். கடந்த 14ம்தேதி இரவு சுமதி அங்குள்ள ஓட்டலுக்கு சென்று 2 “சிக்கன் ரைஸ்’’ வாங்கி வந்தார். அதில் விஷத்தை கலந்து 2 மகள்களுக்கு முதலில் கொடுத்துள்ளார்.

பின்னர் அவரும் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் சுமதியும், மூத்த மகள் அனுசியாவும் வாயில் நுரைத்தள்ளி உயிருக்கு போராடினர். மற்றொரு மகள் சக்திஸ்ரீ ரைஸை சரியாக சாப்பிடாததால் எந்த பாதிப்பும் இல்லை. இந்நிலையில் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். இதில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுகுறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: