தருமபுரி: வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் மார்ச் 28 வரை பழைய ஆயக்கட்டில் இடதுபுற கால்வாயில் உள்ள ஏரிகள் மற்றும் நேரடி பாசனத்திற்காக 20 நாட்களுக்கும், அதனை தொடர்ந்து வலதுபுற கால்வாயில் உள்ள ஏரிகள் மற்றும் நேரடி பாசனத்திற்கு 20 நாட்களுக்கும் ஆக மொத்தம் 40 நாட்களுக்கு 5108 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 103.68 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பழைய ஆயக்கட்டு பகுதிகள் மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகள் 5108 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
