சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு அதிக சுயாட்சி உரிமை அளித்த திமுகவுக்கு எங்கள் முழு ஆதரவு: பேராயர் ஏ.எம்.சின்னப்பா தகவல்

சென்னை: சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு அதிக சுயாட்சி கொடுத்த திமுகவுக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் முழு ஆதரவு, என பேராயர் ஏ.எம்.சின்னப்பா தெரிவித்துள்ளார். சென்னை மயிலை முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கும், எங்களுக்கும் உறுதுணையாக இருந்து, எங்களுடைய தேவைகள், நமது நாட்டின் சட்டத்தில் இருக்கிற உரிமைகளை வென்று எடுக்கின்ற வகையில் எங்களுக்கு எல்லாவிதமான உரிமைகளை வழங்கி பாதுகாத்து திமுக அரசு வழிநடத்தி வருகிறது.

திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். தேவாலயங்களின் பாதுகாப்பு மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிக்கு மானியம் தருகிறார். தேவையான கல்லறை தோட்டங்கள் அமைத்து தருகின்றனர். கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கி இருக்கிறார். கிறிஸ்துமஸ் பரிசு வழங்கும் உரிமையை உறுதிபடுத்தி இருக்கிறார். கல்வி நிறுவனங்களுக்கு அதிக சுயாட்சி தருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். கூடுதலாக கிறிஸ்துமஸ் விழாக்கள், சிறுபான்மை விடுதி, மாணவர்களுக்கு சிறப்பு உணவு, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய கிறிஸ்தவ சந்தங்கள் அமைத்து கொடுத்துள்ளார். எங்கள் நிறுவனங்கள் மூலம் பயன்பெறுகின்ற அத்தனை மக்கள் சார்பாக நான் பேசுகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளாக, எங்களுடன் தோள் கொடுத்து, எங்களுடைய கவலைகள் எல்லாம் நீக்கி, எங்களுடன் பயனித்து எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வரும் திமுக தலைவருக்கு மீண்டும் ஒரு முறை எங்களது ஆதரவை அளித்து, அவர் மீண்டும் அரசு அமைத்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு உறுதிபாட்டினை எடுக்கின்ற நிலையில் நாங்கள் இப்போது இருக்கிறோம். எனவே, வரும் தேர்தலில் திமுகவை ஆதரிக்கிறோம். தொகுதி மறு சீரமைப்பு, மக்கள் தொகை அடிப்படையில் நடந்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு பேராயர் ஏ.எம்.சின்னப்பா தெரிவித்தார்.

Related Stories: