வழிநடத்துவதில் முன்னோடி மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு அநீதி நிகழும் போதெல்லாம் நம்மை உயர்த்தி பிடிப்பது திராவிட குடும்பம்: கமல்ஹாசன் பெருமிதம்

சேலத்தில் நடந்த திமுக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: தெற்கு தேய்கிறது என்று அண்ணா சொன்னார். இப்போது அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்கிறார்கள். ஆனால் அவர் எழுப்பிய எழுச்சி கொள்கையை இப்ேபாது நாம் எழுப்ப வேண்டியுள்ளது. அதற்கான காரணம் இன்னமும் அப்படியே இருக்கிறது. நிகழ்ந்து கொண்டிருக்கும் போலி அரசியலையும், மக்கள் சார்பான அரசியலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

33 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நாங்கள் என்றோ சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை இன்றுதான் புதிய கண்டுபிடிப்பு போல் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதையும் டிலிமிடேசன் என்று சொல்லும் உங்கள் சூழ்ச்சி நிலைக்க கூடாது. தேர்தல் முடியட்டும் பேசலாம் என்றால் உடனே பேசலாம் என்கிறீர்கள்.  மக்கள் நீதி மையத்தின் சார்பாக திராவிட தலைவர்கள் எல்லாம் என்னை ராஜ்யசபாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த குரலாக நாம் அங்கு செல்ல வேண்டும்.

அனுமதி உண்டா? இல்லையா? பிரசாரம் தொடர வேண்டுமா? என முதல்வரிடம் கேட்டேன். பிரசாரத்தை விட, இந்த தேர்தலை விட முக்கியமானது தமிழ்நாட்டின் எதிர்காலம். நீங்கள் போக வேண்டும் என்று முதல்வர் சொன்னார். அதைத்தான் நான் செய்யப் போகிறேன். நாளை கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என்று சொன்னபோது எனது சகோதரி, நீங்கள் இன்றே கருப்பு சட்டை போட்டுவிட்டு வந்து விட்டீர்களே என்று சொன்னார். நான் என்றோ போட்டுக் கொண்டு விட்டேன். இந்த கலரை நாளை கொடியாக ஏற்றவேண்டும்.

தமிழகத்திற்கு அநீதி நிகழும் போதெல்லாம் நம்மை உயர்த்தி பிடிப்பது இந்த திராவிட குடும்பம். அதில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. சங்கோஜமும் கிடையாது. இன்று நான் எழுதிய பாடலை திராவிட குடும்பத்திற்கான பாட்டாக மாற வேண்டும், அதற்கு அனுமதி வேண்டும் என்றேன். தந்தையை போல் முதல்வரும் அனுமதித்தார். திராவிட பல்லாக்கை தூக்கிப்பிடிக்க என் தோளை கொடுக்க கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணிப் பார்க்கிறேன். கல்வி அறிவு இங்கே அதிகம். ஆனால் அது இல்லாத பல மாநிலங்கள் இருக்கிறது.

அவைகளுக்கும் சேர்த்து குரல் கொடுப்பது தான் தமிழ்நாடு என்பதை நாளைய சரித்திரம் சொல்லும். எப்படி பல துறைகளில் முதலிடம் வகிக்கிறோம் என்ற உண்மை கசந்தாலும் அவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டியது நிலைமை வரும். நான் எதிர்க்கட்சி என்று எதையும் பார்ப்பதில்லை. தமிழ்நாடு நம்முடையது, சித்தாந்தங்கள் எப்படி இருந்தாலும் அவற்றை அரவணைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளார் சகோதரர் ஸ்டாலின்.

எனக்கு 21வயதாக இருந்தபோது இவரது தந்தை, நீ ஏன் இன்னும் திமுகவில் சேரவில்லை என்று எனக்கு ஒரு டெலிகிராம் அனுப்பினார். பதில் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. இன்று நான் இந்த குடும்பத்தில் சேர்ந்து விட்டேன் என்பதுதான் உண்மை. எனக்கென்று ஒரு தனி கட்சி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எங்களுடன் திராவிடம் இருக்க வேண்டும். திராவிடம் வளர வேண்டும். திராவிடம் பெருக வேண்டும்.

திராவிடம் வெல்ல வேண்டும் என்பதற்காக நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என்று சொன்ன அந்த பெருமையைத்தான் சகோதரியாரும் சுட்டிக்காட்டினார். இந்த கூட்டத்தில் 30 ஆயிரம் பெண்கள் நடந்திருக்கிறார்கள். தமிழகத்தின் முன்னோடி உதாரணமாக நீங்கள் நடந்துள்ளீர்கள். நாளைய சரித்திரத்தை நீங்கள் எழுதி விட்டீர்கள். இந்த வியர்வை எல்லாம் வீணாகாது. நாளை நமதே என்பது அனைவருக்கும் சேர வேண்டும். அது ஒரு தனிகட்சியின் முழக்கமாக இருக்கக் கூடாது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related Stories: