சென்னை: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க கோரி, பெங்களூரு புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புரட்சி அதிமுகவின் முதன்மை செயலாளர் பெங்களூரு புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் அவதூறாக பேசி வருகிறார். இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இதுதவிர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் அவதூறாக பேசிவருகிறார். எனவே, தேர்தல் பிரசாரத்தின் போது தொடர்ந்து அவதூறு பரப்பி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி வரும் எடப்பாடி பழனிசாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
