பாடாலூர், பிப்.16: சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி உத்தரவின் படி குன்னம் சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்து வருகிறது.
அதன்படி ஆலத்தூர் தாலுகா குன்னம் சட்டமன்ற தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நேற்று பேரணி சென்றனர். இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் சக்திவேல், தாசில்தார் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பேரணி கல்லூரி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதியின் வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்தில் நிறைவடைந்தது. இதில் வாக்காளர்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை 100 சதவீதம் சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் கல்லூரி முதல்வர் கண்ணதாசன், தேர்தல் துணை தாசில்தார் ரெங்கநாதன், வருவாய் ஆய்வாளர் பாலகுமார், கல்லூரி மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
