கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி சுற்று வட்டாரத்தில் கஞ்சா விற்பனை மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம் மேம்பாலம் அருகே கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக 2 பைக்குகளில் 6 பேர் வேகமாக வந்தனர். அங்கு போலீசாரை கண்டதும், தப்பி செல்ல முயன்றனர். உடனே போலீசார், அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில, மண்ணிவாக்கம் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையை சேர்ந்த பாலாஜி (22), மேட்டு தெரு சூர்யா (20), அம்பேத்கர் தெரு நந்தகோபால் (21), வண்டலூர் நிர்மல்குமார் (24) என்றும், 2 பேர் சிறுவர்கள் என்றும் தெரிந்தது.