தோஹா: கத்தார் ஓபன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, செக் வீராங்கனை கரோலினா முசோவா அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். கத்தார் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள், கத்தாரின் தோஹா நகரில் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த காலிறுதிப் போட்டிகளில், கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகோ, லாத்வியா வீராங்கனை எலனா ஒஸ்டபென்கோ, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தனர்.
இவர்களில் மரியா சக்காரி, போலந்தை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக்கை வெற்றி கண்டார். இந்நிலையில் நேற்று நடந்த கடைசி காலிறுதிப் போட்டியில் செக் வீராங்கனை கரோலினா முசோவா, ரஷ்ய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார். போட்டியின் துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய கரோலினா, முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அவரது ஆதிக்கமே காணப்பட்டது. எனவே, அந்த செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் அரை இறுதிக்கு முன்னேறினார். அவர், மரியா சக்காரியுடன் அரையிறுதியில் மோதவுள்ளார்.
