ஈஷாவில் பிப்ரவரி 15ஆம் தேதி மகா சிவராத்திரி விழா: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 15ஆம் தேதி மாலை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ரவீந்திரன் மற்றும் தன்னார்வலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் பேசியதாவது;
“ஈஷாவில் 32வது மகா சிவராத்திரி விழா 15ஆம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர். 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதில் சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஸ்வரலிங்க மகா அபிஷேகம் மற்றும் சிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

மேலும் இந்தாண்டு முதன் முறையாக சத்குரு ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் யோகேஸ்வர லிங்கத்திற்கு மகா அபிஷேகம் எனும் ஆன்மிக செயல்களை அர்ப்பணிக்க உள்ளார்” என தெரிவித்தனர்.

மேலும், மக்களின் வசதிக்காக தேவையான பார்க்கிங் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள், மருத்துவ வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தர உள்ளதாகவும் குறிப்பிட்டனர். ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 60 இடங்களிலும், கேரளாவில் 29 கோவில்களிலும் நேரலை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: