யுஜிசியின் புதிய விதிமுறைகளை செயல்படுத்த கோரி சென்னையில் நாளை பேரணி, ஆர்ப்பாட்டம்: மாணவர் அமைப்புகள், மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: யுஜிசியின் புதிய விதிமுறைகளை செயல்படுத்த கோரி சென்னையில் நாளை பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஓருங்கிணைப்பாளர்கள் இரா.ராஜீவ்காந்தி, தௌ.சம்சீர் அகமது வெளியிட்ட அறிக்கை:
அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் ஜாதி, மதப் பாகுபாடுகள் காரணமாக தெலங்கானாவில் ரோஹித் வேமுலா, டெல்லியில் பாயல் தத்வி, தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், சரவணன், சென்னை ஐஐடியில் ஃபாத்திமா லத்தீப் என நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இன்னும் பல்லாயிரக் கணக்கானோர் தங்கள் படிப்பைத் துறந்து மனம் உடைந்து வெளியேறியுள்ளனர்.

இவற்றுக்கு மருந்தாக, கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளைத் தடுப்பதற்காக, முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் யூ.ஜி.சி. கொண்டு வந்த விதிமுறைகளுக்கு, அண்மையில் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது மாணவர் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதனை முறையாகக் கையாளாமல், மறைமுகமாக இத் தடைக்குக் காரணமாக இருந்த ஒன்றிய அரசைக் கண்டித்தும், உச்சநீதிமன்றம் இத்தடையை நீக்கக் கோரியும் இந்தியா முழுவதும் மாணவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மாணவர் அமைப்புகளின் இருக்கும் கூட்டமைப்பான மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு” சார்பில் வரும் 13ம் தேதி(நாளை) மாலை 3.30 மணியளவில் சென்னையில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். சென்னைப் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள சுவாமி சிவானந்தா சாலையில் நடைபெறவுள்ள இந்தப் பேரணியிலும், ஆர்ப்பாட்டத்திலும் தமிழ்நாட்டின் முன்னணி மாணவர் அமைப்புகளும், பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களும் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: