அகமதாபாத்: உலகக் கோப்பை டி20 9வது போட்டி, அகமதாபாத் நகரில் நேற்று நடந்தது. அதில் தென் ஆப்ரிக்கா – கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற கனடா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி துவக்க வீரர்கள் கேப்டன் அய்டன் மார்க்ரம், குவின்டன் டிகாக், முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில், டிகாக் 25 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மார்க்ரம் (32 பந்து, ஒரு சிக்சர், 10 பவுண்டரி, 59 ரன்), 12வது ஓவரில் அன்ஷ் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். 14வது ஓவரில் ரையான் ரிக்கெல்டன் 21 பந்துகளில் 33 ரன் எடுத்து அவுட்டானார். அதன் பின், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 39 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 34 ரன் விளாசினர். 20 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா, 4 விக்கெட் இழந்து 213 ரன் குவித்தது. பின்னர், 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி கனடா ஆட்டத்தை துவக்கியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றிப் பெற்றது.
