ஏரல், பிப். 10: ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள நவலட்சுமிபுரத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களும், பால்குளம் கிழக்கு தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றன. இந்த கிராமங்கள் தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. இருந்தாலும் இப்பகுதி மக்களுக்கு அடிப்படை தேவையான சுகாதாரமான குடிநீர் மற்றும் தெருக்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து செயலரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் ஊர் மக்கள் திரண்டு வந்து ஏரல் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தார் கோமதிசங்கரிடம் மனு கொடுத்தனர்.
அதில் நவலட்சுமிபுரம், பால்குளம் பகுதி மக்களின் கோரிக்கையான குடிநீர் வசதி, மின்விளக்கு வசதிகளை ஒருவாரத்தில் அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை என்றால் வரும் 18ம் தேதி பொதுமக்களை திரட்டி பாஜ சார்பில் ஆழ்வார்திருநகரியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் பாஜ மாவட்ட பொதுச் செயலாளர்கள் பூவை செல்வராஜ், கனல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் சபரிமலை, பானுமதி மோகன், வக்கீல் அணி மாவட்ட தலைவர் சீனிவாசன், வை. மண்டல தலைவர் மணிகண்டன், ஓபிசி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்குமார், ஆழ்வை ஒன்றிய பொதுச் செயலாளர்கள் அந்தோணிராஜ், சரவணன், ஓபிசி மாவட்ட தலைவர் வென்னிமாலை, அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், ஏரல் மண்டல செயலாளர் தேவராஜ் மற்றும் நிர்வாகிகள், நவலட்சுமிபுரம், பால்குளம் பகுதி ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.
