அரசுப்பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016ன் பிரிவு 33ன் கீழ், தமிழ்நாடு தலைமைச் செயலக சேவையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனப் பணியிடங்களை அடையாளம் காணும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை படி, அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான நடைமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016ன் படி, அரசு நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகள் பணியாற்ற ஏற்ற பணியிடங்களை அரசு அடையாளம் காண வேண்டும் என்பது கட்டாயமாகும். இதன் தொடர்ச்சியாக, 2023 மற்றும் 2025 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மற்றும் கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி நடந்த நிபுணர் குழு கூட்டத்தின் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசு பரிசீலனை செய்துள்ளது.

அதன் அடிப்படையில், தலைமைச் செயலக சேவையில் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமான பணியிடங்களை அடையாளம் காண அரசு முடிவு செய்துள்ளது. உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், பிரிவு அலுவலர், துணை செயலாளர், தனிப்பட்ட எழுத்தர், மூத்த தனிப்பட்ட எழுத்தர், தனிப்பட்ட உதவியாளர், தனிச்செயலாளர், மூத்த தனிச்செயலாளர், பதிவுக் க்ளார்க், பதிவு உதவியாளர், தட்டச்சர் மற்றும் மூத்த தட்டச்சர் ஆகிய பணியிடங்கள் இதற்காக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களில் பார்வை குறைபாடு, குறைந்த பார்வை, செவித்தடை, உடல் இயக்கக் குறைபாடு, நரம்பியல் மற்றும் மனநல குறைபாடுகள் உள்ளிட்ட மாற்றுத் திறன் வகைகள் பணியிடத்திற்கேற்ப பதவிகள் வழங்கப்படும். குறிப்பாக, தட்டச்சர் மற்றும் மூத்த தட்டச்சர் பணியிடங்களுக்கு, எழுத்துப் புரிதல், சரியான தட்டச்சு மற்றும் கணக்கீட்டு திறன் அவசியம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தலைமைச் செயலக சேவையில் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமான பணியிடங்களை அடையாளம் காண அரசு முடிவு செய்துள்ளது

Related Stories: