காரமடை, ஜன. 24: மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் தாஸ்(42). ஜவுளிக்கடை ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் காரமடை சென்று விட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது, காரமடை நவீன எரிவாயு மின்மயானம் அருகே எதிரில் வாகனங்கள் வருவதை அறியாமல் பைக்கில் சாலையை கடக்க முற்பட்டுள்ளார்.
அப்போது, எதிரே வந்த தனியார் கல்லூரி வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
