பந்தலூர்: பந்தலூர் அருகே வன விலங்கு தாக்கி பசுமாடு பலியானது. நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம், சேரம்பாடி புஞ்சக்கொல்லி பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி எலிசம்மா. இவரது பசுமாட்டை அருகே உள்ள டேன்டீ தேயிலைத் தோட்டத்தில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.அப்போது வன விலங்கு தாக்கி பசுமாடு உயிரிழந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சேரம்பாடி சரக பொறுப்பு உதவி வன பாதுகாவலர் ஜிதின்பாபு, வனவர் முத்தமிழ், வனகாப்பாளர் அனீஸ் உள்ளிட்ட வனத்துறையினர் வந்து பார்வையிட்டனர். பசுவை தாக்கியது சிறுத்தை அல்லது புலியாக இருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.வனத்துறையினர் கூறுகையில், ‘‘பசுமாடு இறந்துள்ள இடம் குடியிருப்புக்கு ஒட்டிய பகுதி என்பதால் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.
