ஊட்டி,மார்ச்11: ஊட்டி அருகே உள்ள சூட்டிங்மட்டம் பகுதியில் பூத்துள்ள ‘ரோடோடென்ட்ரான்’ மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள் மற்றும் மலர் செடிகள் அதிகளவு காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மரங்கள் மற்றும் தாவரங்களை ஊட்டிக்கு கொண்டு வந்து பயிரிட்டனர். ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் நிலவும் காலநிலை இங்கும் நிலவுவதால், அந்த நாடுகளில் காணப்படும் பல்வேறு வகையான மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் அதிகளவு இங்கு கொண்டு வந்து நடவு செய்யப்பட்டன.
