திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் ஒன்றிய அரசுக்கு எதிரான வாசகங்களை நீக்கியும், சில வாசகங்களை சேர்த்தும் கவர்னர் உரையை வாசித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நேற்று காலை தொடங்கியது. கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் உரையை வாசித்தார். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக குறிப்பிடப்பட்டிருந்த சில வாசகங்களை அவர் நீக்கி வாசித்தார். மேலும் சில வாசகங்களை சேர்க்கவும் செய்தார். உரையை வாசித்து முடித்த பின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் சபையிலிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு சபை மீண்டும் கூடியது. அப்போது முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், கவர்னர் வாசிக்காத வரிகளை சேர்த்து வாசித்தார். கவர்னர் நீக்கிய வாசகங்கள் அனைத்தும் உரையில் அப்படியே இடம்பெறும் என்று முதல்வர் தெரிவித்தார்.
