சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கே.மணிவண்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2 கோடியே 68 லட்சம் மாற்றுத் திறனாளிகள் நாட்டில் இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான கல்வி, உயர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியும் முறையாக கிடைக்கவில்லை.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடம் கடந்த 2023, 2024ம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பினேன். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும், தொகுதி மறுவரையறை சட்டத்திலும் இதற்கு வழிவகை செய்யப்படவில்லை என்று கூறியது. எனவே, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, இந்த வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
