கரூரில் அனுமதியின்றி ஊர்வலம் முன்னாள் அமைச்சர் உள்பட 4 அதிமுக வேட்பாளர்கள் மீது வழக்கு

 

கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரத்தில் திவ்யா, அரவக்குறிச்சியில் செல்வகுமார், குளித்தலையில் கருணாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் நேற்றிரவு கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலிதா, அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது சுக்காலியூர் ரவுண்டானாவில் அதிமுகவினர் திரண்டு 4 வேட்பாளர்களுக்கும் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து வேட்பாளர்கள் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அப்போது வழிநெடுகிலும் தொண்டர்கள் மலர் தூவியும், பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். இந்த திடீர் ஊர்வலத்தில் 50 இருசக்கர வாகனங்கள், 20 நான்கு சக்கர வாகனங்களில் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் புகாரின் பேரில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுதல், அனுமதியின்றி வெடி வெடித்தல், கட்சி கொடியை பயன்படுத்துதல், அதிகாரிகள் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 4 வேட்பாளர்கள் உள்பட 500 பேர் மீது கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சிசிடிவி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பதிவு எண்களை ஆராய்ந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: