மணப்பெண் வீட்டில் 14 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை ஆரணி அருகே துணிகரம்

ஆரணி, ஜன.28: ஆரணி அருகே மணப்பெண் வீட்டில் 14 சவரன் நகைளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வேலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தரணிபாலன்(56). இவரது மனைவி சாந்தி(51), மகன் சந்தோஷ்(23), மகள் சவுமியா(27). இந்நிலையில், சவுமியாவிற்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன்(29) என்பவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது. இதற்காக தரணிபாலன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு திருமண நிகழ்ச்சிகள் முடிந்ததும், நேற்று மாலை தரணிபாலன் மற்றும் குடும்பத்தினர் மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும், அதில் இருந்த 14 சவரன் நகைகள், ₹10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்து தரணிபாலன் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories: