955 ஹெக்டேர் சதுப்பு நில காடுகள் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்பு

 

மும்பை: மாநிலத்தில் உள்ள அனைத்து சதுப்பு நில பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு சுமார் 10 ஆண்டுகள் கழித்து, 955 ஹெக்டேர் சதுப்பு நில காடுகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான சதுப்பு நிலங்கள் உள்ளன. இவற்றுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று 10 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் அந்த உத்தரவு செயல்படுத்தப்படாததால், வனசக்தி எனும் சுற்றுச்சூழல் அமைப்பு கடந்தாண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 7 கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களும் தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சதுப்பு நிலத்தை மாநில சதுப்பு நிலப் பிரிவிடம் ஒப்படைக்க வேண்டுமென என உத்தரவிட்டது.

அதன் படி, நடப்பாண்டின் முதல் காலாண்டில் 955 ஹெக்டேர் நிலம் சதுப்பு நிலப் பிரிவின் கீழ் வந்தது. 1980 வனப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த நிலங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாநில சதுப்பு நிலப் பிரிவு அறிவித்துள்ளது. எனவே இனி இந்த நிலத்தில் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் எஸ்.வி. ராமராவ் கூறுகையில், ‘கொங்கன் கடற்கரை பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் சதுப்பு நிலக் காடுகள் மகாராஷ்டிரா பாதுகாப்பு படை மற்றும் வனத்துறை பணியாளர்கள் மூலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்கும் வகையில், முக்கியமான பகுதிகளில் வேலி அமைத்தல், சுவர் கட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. சதுப்பு நிலங்களை வெட்டுவதற்கு எளிதில் அனுமதி வழங்கப்படுவதால், இந்த நடவடிக்கை அவற்றை பாதுகாக்க உதவும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: