திருவாரூர், ஜன. 10: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னையில் கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பாக கடந்த 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தினை மாவட்டத்திலும் விரிவுபடுத்தும் வகையில் கடந்த 5ம் தேதி முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி திருவாரூரில் நேற்று 5வது நாளாக இந்த காத்திருப்பு போராட்டமானது மாவட்ட பொருளாளர் பாலாஜி தலைமையிலும், மாநில செயற்குழு உறுப்பினர் புண்ணியமூர்த்தி, வட்டார செயலாளர் நக்கீரன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதுகுறித்து பொருளாளர் பாலாஜி கூறுகையில், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை சமூக நீதி காத்து வரும் திராவிட மாடல் அரசின் முதல்வர் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
