ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி: பரமபதவாசல் திறக்கப்படாது

 

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராப்பத்து உற்சவத்தையொட்டி நேற்று மாலை ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் கைத்தல சேவை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நடக்கிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 20ம் தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. பகல் பத்து பத்தாம் நாளில் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு கடந்த 30ம் தேதி நடந்தது.

தொடர்ந்து ராப்பத்து உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. ராப்​பத்து உற்சவத்​தின் 7ம் நாளான நேற்று மாலை நம்பெரு​மாள் கைத்தல சேவை நடந்தது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு நம்பெரு​மாள் மூலஸ்​தானத்​திலிருந்து புறப்​பட்டு சொர்க்க வாசலை கடந்​தார். பின்னர் அங்கிருந்து புறப்​பட்டு மாலை 5.45 மணிக்கு திரு​மாமணி மண்டபத்தை வந்தடைந்​தார். அங்கு கைத்தல சேவை நடந்தது. அதன்​பின், இரவு 11.30 மணிக்கு திரு​மாமணி மண்டபத்​தில் இருந்து புறப்​பட்டு நம்பெரு​மாள் மூலஸ்​தானம் சென்​றடைந்​தார். ராப்​பத்து உற்சவத்​தின் 8ம் நாளான இன்று (6ம் தேதி) திரு​மங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையொட்டி, மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்​தில் இருந்து நம்பெரு​மாள் தங்க குதிரை வாகனத்​தில் புறப்​பட்டு வையாளி வகையறா கண்டருளுகிறார். இரவு 7.30 மணிக்கு திரு​மாமணி மண்டபம் சென்​றடைகிறார். அங்கு உபயதாரர் மரியாதை​யுடன் பொதுஜன​சேவை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திரு​மாமணி மண்டபத்​தில் இருந்து புறப்​பட்டு நம்பெரு​மாள் நள்ளிரவு 12 மணிக்கு மூலஸ்​தானம் சென்​றடைகிறார். திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியையொட்டி இன்று பரமபதவாசல் திறப்பு கிடையாது. 8ம் தேதி தீர்த்​தவாரி நடைபெறும். 9ம்தேதி நம்மாழ்​வார் மோட்​சம், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்​சி​யுடன் ​விழா நிறைவடைகிறது.

Related Stories: