அரியலூர்,ஜன.21: அரியலூர் மாவட்டம் முழுவதும் மழையில் மூழ்கிய பல்லாயிரம் ஏக்கர் நெல், மக்காச்சோளம், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு உடனடியாக ஆய்வு செய்து இழப்பீடு வழங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயிகள், நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டம் தழுவிய விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்துள்ளனர். அரியலூர் மாவட்டம் முழுவதும் சமீபத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெல்பயிர் தண்ணீரில் சூழப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாரான நெல்மணிகளும் வயல்களில் சாய்ந்து பயிர்கள் முழைத்து வீணாகிவிட்டது. இதுபோன்று மானாவரி பயிர்களான மக்காச்சோளம், மிளகாய், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களும் மழைநீரால் அழுகி விவசாயிகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணமும், மற்றப்பயிர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க கோரி, விவசாயிகள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.