ரூ.43.91 கோடியில் 9 புதிய காவல் நிலையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 

சென்னை: 9 புதிய காவல் நிலையங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 3 காவல் உட்கோட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் ரூ.22.9 கோடி செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.16.96 கோடி செலவிலும் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் ரூ.68.47 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், 9 புதிய காவல் நிலையங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரமேரூர், வேளாங்கண்ணி மற்றும் பள்ளிப்பாளையம் ஆகிய மூன்று புதிய காவல் உட்கோட்டங்களையும் திறந்து வைத்தார். மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் ரூ.573.05 கோடி செலவில் 3418 காவலர் குடியிருப்புகள், ரூ.73.65 கோடி செலவில் 56 காவல் நிலையக் கட்டடங்கள், ரூ.170.19 கோடி செலவில் 28 காவல்துறை இதர கட்டடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி செலவில் 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டம் – சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.9.73 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மகளிர் காவலர் விடுதி. கிருஷ்ணகிரியில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி மற்றும் திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டையில் ரூ.11.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பாளையம் என மொத்தம் ரூ.22.8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

2025-26ம் ஆண்டிற்கான காவல் துறை மானியக் கோரிக்கையில், பொதுமக்கள் காவல் நிலையத்தை எளிதில் அணுகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், அதிகளவில் தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நிறைந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு காவல் துறையில் கோயம்புத்தூர் மாவட்டம் – நீலாம்பூர், சிவகங்கை மாவட்டம் – கீழடி, திருநெல்வேலி மாவட்டம் – மேலச்செவல், திருப்பூர் மாவட்டம் – பொங்கலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – களமருதூர், நாமக்கல் மாவட்டம் – கொக்கராயன்பேட்டை, மதுரை மாநகரம் – சிந்தாமணி மற்றும் மாடக்குளம், தருமபுரி மாவட்டம் – புலிக்கரை ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 9 காவல் நிலையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தல், பரந்த அதிகார வரம்பு, அதிகரித்து வரும் மக்கள் தொகை, நகர்ப்புர விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு, அதிக எண்ணிக்கையிலான மக்கள் குறைதீர் மனுக்கள், சாலை விபத்துகள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, தேவையான பணியிடங்களுடன் புதிதாக காவல் உட்கோட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் 2025-26ம் ஆண்டிற்கான காவல் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர், நாகப்பட்டினம் மாவட்டம் – வேளாங்கண்ணி மற்றும் நாமக்கல் மாவட்டம் – பள்ளிப்பாளையம் ஆகிய இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று புதிய காவல் உட்கோட்டங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை மாவட்டம் – செங்குன்றத்தில் ரூ.13.54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 53 பணியாளர்கள் குடியிருப்புகள், சென்னை மாவட்டம் – செங்குன்றத்தில் ரூ.3.41 கோடி லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் என மொத்தம் ரூ.16.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னை மாவட்டம் – புழலில் சென்னை மத்திய சிறை – I மற்றும் மத்திய சிறை – II ஆகிய சிறைகளின் அங்கீகரிக்கப்பட்ட அடைப்பு எண்ணிக்கை முறையே 1250 மற்றும் 2000 ஆகும். வேலை நாட்களில் தினமும் சுமார் 700 சிறைவாசிகளின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிறைவாசிகளை நேர்காணல் காண சிறைகளுக்கு வருகை புரிகின்றனர்.

நீண்ட நேர வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், காத்திருப்பு நேரத்தில் பார்வையாளர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கும் பொருட்டும், சென்னை மத்திய சிறை வளாகத்தில் 3300 சதுர அடி பரப்பளவில், ரூ.68.47 லட்சம் செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பார்வையாளர்கள் காத்திருப்பு கூடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவிலில் ரூ.4.17 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ரகுபதி, சிவசங்கர், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் அபய் குமார் சிங், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வினித் தேவ் வான்கேடே, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: