மேட்ரிமோனியல் மூலம் பழகி இளம்பெண்ணுடன் உல்லாசம்: ரூ.10 லட்சம், 2.5 பவுன் மோசடி; சென்னை தொழிலதிபர் மீது புகார்

கோவை: மேட்ரிமோனியல் மூலம் அறிமுகமாகி கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்து, ரூ.10 லட்சம் மற்றும் 2.5 பவுன் நகையை பெற்று மோசடி செய்த சென்னை வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை போலீஸ் கமிஷனரிடம் இளம்பெண் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யா (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவை ஒண்டிப்புதூரில் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். துணி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று சத்யா கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகிறது. 11ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், எனது கணவர் 2022ல் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனையடுத்து எனது சகோதரி ஒருவர் எனக்கு மேட்ரிமோனியல் (திருமண தகவல் மையம்) மூலம் மணமகன் தேடினார். அதில் உள்ள செல்போன் எண் மூலம் கடந்த ஜனவரி மாதம் சென்னையை சேர்ந்த 38 வயது வாலிபர் தொடர்பு கொண்டார். அப்போது அவர் தனக்கு திருமணமாகவில்லை என்றும், உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன் பின்பு இருவரும் பழகி வந்தோம்.

அந்த சமயங்களில் அவர் தொழில் தேவைக்காக எனக் கூறி என்னிடம் ரூ. 10 லட்சம் மற்றும் 2 பவுன் நகை வாங்கினார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் எனது வீட்டுக்கு வந்த அவர் கட்டாயப்படுத்தி உறவு கொண்டார். பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. என்னுடன் பழகுவதை தவிர்த்து வந்தார். அவர் குறித்து விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், இதேபோல் வேறு ஒரு பெண்ணை ஏமாற்றியதாகவும் காவல் நிலையத்தில் புகார் உள்ளது. அவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருவதாக கூறினார். அங்கு சென்று பணம், நகை குறித்து கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். என்னை போல் பலரும் பாதிக்கப்படாமல் இருக்க அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: