உத்தமபாளையத்தில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

உத்தமபாளையம், டிச. 17: உத்தமபாளையத்தில் மின்சாரம் தாக்கியதில் தற்காலிக மின் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். கோம்பை திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் சிவா (25). இவர் உத்தமபாளையம் துணைமின் நிலையத்தில் தற்காலிக மின் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் சக மின் ஊழியர்களுடன் வேலைக்கு சென்றார்.

மதியம் உத்தம பாளையம் பி.டி.ஆர். காலனி எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் மின்சார பணிகளுக்கான வேலை நடந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவா அங்குள்ள மின்சார கம்பத்தில் ஏறி மின்சாரம் வருவதற்கான பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் சிவா தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி கொண்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் சிவா இறப்பிற்கான உண்மையான காரணம் குறித்து உத்தமபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: