பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி கிராமத்தை சேர்ந்த வரலட்சுமி என்ற பெண், நேற்று முன்தினம் பேரணாம்பட்டு- வி.கோட்டா செல்லும் சாலையில் உள்ள மலைப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அங்குள்ள ஒரு மரத்தடியில் வரலட்சுமி அமர்ந்திருந்த நிலையில், திடீரென மாடுகள் அலறும் சத்தம் கேட்டு, அங்கு சென்று பார்த்தார். அப்போது, சிறுத்தை ஒன்று கன்றுகுட்டிகளை கடித்து குதறி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கத்தி கூச்சலிட்டபடி அங்கிருந்த கற்களை வீசி சிறுத்தையை விரட்ட முயற்சித்துள்ளார்.
அவரையும் தாக்க முயன்றபோது கையில் வைத்திருந்த கம்பால் தாக்குவதற்காக சிறுத்தையை நோக்கி ஓடி உள்ளார். இதனால் சிறுத்தை ஒரு கன்று குட்டியை கவ்விக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து காயமடைந்த 2 கன்றுகுட்டிகள் மற்றும் மாடுகளை வரலட்சுமி வீட்டிற்கு ஓட்டிச்சென்றார். தகவலின்பேரில் வனத்துறையினர் வந்து காயமடைந்திருந்த 2 கன்று குட்டிகளை பார்வையிட்டு சிறுத்தைதான் கடித்து குதறி உள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
