திருமலை: அடிக்கடி போனில் பேசியதை தட்டிக்கேட்ட கணவரை, மனைவி கோடாரியால் அடித்துக்கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சிந்தப்பள்ளி அடுத்த மேதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராவ்(46), இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேவி கடந்த 2 ஆண்டுகளாக யாரோ ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசுவாராம். இதனை அறிந்த கணவர் ராஜாராவ், மனைவியை தட்டிக்கேட்டார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், வழக்கம்போல் தேவி, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனைக்கண்ட ராஜாராவ், ஏன் தொடர்ந்து போனில் பேசுகிறாய்? எனக்கூறி அவரை திட்டியுள்ளார். இதனால் கணவர் மீது தேவி கடும் ஆத்திரத்தில் இருந்தார். பின்னர் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி நேற்று அதிகாலை 3 மணியளவில் ராஜாராவ் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது தேவி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து, கணவரின் தலையில் சரமாரியாக அடித்தார். இதனால் படுகாயம் அடைந்த ராஜாராவ், மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அருகில் தூங்கிக்கொண்டிருந்த அவரது மகன் எழுந்தார். அதற்குள் தேவி தப்பியோடிவிட்டார். இதையடுத்து ராஜாராவை அக்கம்பக்கத்தினர் உதவியுடன், மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிந்தப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாராவ் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரில் மறைவான இடத்தில் பதுங்கியிருந்த தேவியை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
