புதுடெல்லி: ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாது, கடன் பணத்தை வேறு வகைகளில் திசை திருப்பி விட்டது போன்ற பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது சிபிஐ புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.3,750 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து எல்ஐசி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சதி, முறைகேடு மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. 2020ம் ஆண்டின் தடயவியல் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில், நிதி முறைகேடுகள், போலி கடனாளிகள் மற்றும் நிதி திருப்பி விடப்பட்டது ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.
