திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தேடப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் அதிரடி கைது: பள்ளிகொண்டா டோல்கேட்டில் சுற்றிவளைப்பு

பள்ளிகொண்டா: திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில், 6 ஆண்டாக தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், பாமக நிர்வாகியாக இருந்தார். இவர் அப்பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபட்ட சிலரைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, 2019 பிப்ரவரி 5ஆம் தேதி அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டு இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி ராஜேஷ்கண்ணா தலைமையில், வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் ஆகியோர் கொண்ட குழுவினருக்கு வேலூரை நோக்கி செல்லும் ஒரு காரில் தீவிரவாதிகள் தப்பித்து செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் எஸ்பிக்கள், மற்றும் டிஎஸ்பி நந்தகுமார், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சுங்கசாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, சுங்கசாவடி நோக்கி வந்த கார் ஒன்று மின்னல் வேகத்தில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு நிற்காமல் சென்றுள்ளது. உடனடியாக அந்த காரினை பின்தொடர்ந்த போலீசார் சிறிது தூரத்திலேயே மடக்கி அதிலிருந்த 4 பேரை பிடித்தனர். விசாரணையில் ராமலிங்கம் கொலை வழக்கில் பிடித்து தருவோருக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு தருவதாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் புர்ஹானுதீன்(33) நபீல் ஹாசன் (34) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள். மற்ற 2 பேரிடம் விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: