திருப்பரங்குன்றம் விவகாரம்: வெளிநடப்பு செய்த திமுக கூட்டணி எம்.பி.க்கள்..!

டெல்லி: திருப்பரங்குன்றம் பிரச்சனை குறித்து விவாதிக்க மறுத்ததை எதிர்த்து மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி இருந்தனர். இதனால் பாராளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இருஅவைகளும் கூடியதும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக எம்.பி-க்கள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. திமுகவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கினார்.

இதேபோல் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். இந்நிலையில், இரு அவைகளிலும் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸை ஏற்க முடியாது என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: