மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

ஈரோடு: ஈரோட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்து 5 பவுன் நகையை கொள்ளையடித்த‌ மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு பெரியசேமூர் எல்.வி.ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கமலம் (60). இவர்களது மகன் சேனாதிபதி. இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். மணி இறந்துவிட்டதால் கமலம் தனியாக வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் சேனாதிபதி ஈரோட்டுக்கு வந்து தனது தாய் மற்றும் மனைவியை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.

மூலப்பாளையத்தில் உள்ள மருமகளும் அவ்வப்போது வந்து மாமியாரை பார்த்துவிட்டு சென்றுள்ளார். மேலும் சேனாதிபதி தினமும் தனது தாய்க்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று இரவு சேனாதிபதி தனது தாய் செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. அருகில் வசிப்பவர்களை தொடர்பு கொண்டு, தனது தாய் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறி உள்ளார். அதன்படி அக்கம் பக்கத்தினர் கமலத்தின் வீட்டுக்கு விரைந்தனர். அப்போது வீட்டில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தது. அங்கு சென்றவர்கள் மின் விளக்குகளை போட்டு பார்த்தனர்.

அப்போது வீட்டுக்குள் கமலம் கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவில் வீடு புகுந்து அவரை கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கமலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, 5 தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: