குடியாத்தம், நவ. 26: குடியாத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட விவசாய நிலத்தில் பதுக்கிய 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், காவலாளியை கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமம் அருகே வனப்பகுதியை ஒட்டி கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் செம்மரம், சந்தன மரம், தேக்குமரம், தென்னை உள்ளிட்ட மரங்களை வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தசாமி தற்போது குடும்பத்துடன் ஓசூர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு பகுதியை சேர்ந்த கோபி என்பவர் குடும்பத்துடன் நிலத்திலேயே தங்கி காவலாளியாக இருந்து, விவசாய நிலத்தை பராமரித்து வருகிறார்.
மேலும் கோபி அவ்வப்போது வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாகவும் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக தமிழ்நாடு வன மற்றும் வன உயிரின குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்திற்கு வந்த ரகசிய கிடைத்தது. அதன்படி வேலூர் மற்றும் குடியாத்தம் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உப்பரப்பள்ளி வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு குண்டுகள் லோடு செய்த 2 நாட்டு துப்பாக்கி இருந்தது. மேலும் துப்பாக்கிக்கான மருந்து மயில்இறகு, முயல் வலை, டார்ச்லைட் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்து விவசாய காவலாளி கோபியை கைது செய்து குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 2 நாட்டு துப்பாக்கியில் இருந்த குண்டை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் வெடித்து நாட்டு துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
