ஊட்டி, ஜன. 4: ஊட்டி அருகே சாலை அமைக்கும் பணிக்காக கொண்டு வரப்பட்டிருந்த தார் சாலை அமைக்கும் இயந்திரத்தை லாரியில் ஏற்றி எடுத்துச் செல்வதற்காக குன்னூர்-மஞ்சூர் சாலையில் கீழ் கைகாட்டி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை 3 மணி அளவில் சாலையின் குறுக்கே லாரி நிறுத்தப்பட்டு இயந்திரத்தை ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது தொடர்ந்து மழை பெய்ததால், இயந்திரம் லாரியில் ஏற்ற முடியாமல், சேற்றில் சிக்கிக் கொண்டது. லாரி சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டதால், அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையின் இருபுறமும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.