செங்கல்பட்டு நத்தம் பகுதியில் மக்கள் சபை கூட்டம்: எம்எல்ஏ வரலட்சுமி பங்கேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம் செங்கல்பட்டு நத்தம் வடமலை பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் நரேந்திரன் தலைமை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் அன்புச்செல்வன், நகர திமுக நிர்வாகிகள் மண்ணு, ராஜி, முனுசாமி, இளைஞர் அணி செயலாளர் சந்தோஷ், பரபுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திமுக சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் படப்பை ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், செங்கல்பட்டில் பாதாள சாக்கடை வசதி இல்லை, பாலாற்றுத்தண்ணீர் சரிவர வருவதில்லை, குப்பைகள் சரிவர அகற்றப்படுவது இல்லை, இறப்பு மற்றும் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம்  கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது என்ற குறைகளை, அவர்களிடம் எடுத்து கூறினர். அனைத்து பிரச்னைகளையும் கேட்டறிந்த எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில், ‘‘தமிழகத்தில் திமுக ஆட்சி விரைவில் அமையும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன், செங்கல்பட்டு நகரில் நீண்ட நாள் மக்கள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும்.

நகரம் முழுவதும் தடையின்றி பாலாற்று குடிநீர் வினியோகிக்கப்படும். செங்கல்பட்டு பகுதி முதியோர்கள் பயன்படும் வகையில், செங்கல்பட்டு வரை மாநகர பேருந்தில் முதியோர் இலவச பஸ் பாஸ் திட்டம் நீட்டிக்கப்படும் செங்கல்பட்டு தொகுதி திட்டங்கள் நிறைவேற அனைவரும் அதிமுகவை நிராகரித்து, திமுகவை ஆதரிக்கவேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சந்தியா, மீரா, கலாவதி, ஆப்பூர் சந்தானம், திருவள்ளுவன் சிலம்புசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: