திண்டுக்கல்லில் தடையை மீறி கிரிவலம் செல்ல முயன்ற 40 பேர் கைது

திண்டுக்கல், டிச. 30: திண்டுக்கல் மலைக்கோட்டை சுற்றி கிரிவலம் செல்ல 144 தடை உத்தவு விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பவுர்ணமியை முன்னிட்டு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் சிவபக்தர்கள் காளத்தீஸ்வரர் சிலையுடன் கிரிவலம் செல்ல ஊர்வலமாக புறப்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இந்து அமைப்பினர் சாமி சிலையுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 40 பேரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் சிவபக்தர்களை மட்டும் சாமி சிலையுடன் கிரிவலம் செல்ல அனுமதித்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர் 40 பேரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். இதில் 2 பேர் போலீசாரைக் கண்டித்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து திண்டுக்கல் நகரின் மத்தியில் உள்ள மெயின் ரோட்டில் இந்து முன்னணியினர் 30க்கும் மேற்பட்டோர் காவல்துறையை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: